சென்னை: கோவில்பட்டியில் பட்டப்பகலில் ஒரு ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என டிவிட்டரில் திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி முறைகேடாக அறிவித்தார் என கூறப்படுகிறது. மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் 10 பேர் தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க எப்படி வெற்றி பெற முடியும் என தி.மு.க-வினர் கேள்வி எழுப்பினர். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, சரிவர விளக்கமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஒன்றியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலை மீண்டும் நியாயமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி கோவில்பட்டியில் பட்டப்பகலில் ஒரு ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; பட்டப்பகலில் ஒரு ஜனநாயகப் படுகொலை. கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் திமுகவுக்கு பெரும்பான்மை 10 உறுப்பினர்கள் இருந்தபோதும், அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வென்ற இடங்களில் இப்படியான முறைகேடுகள்தான் நடந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. அதற்கு இதுவும் ஓர் உதாரணம். அடிமை அதிமுக அரசுக்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடு என தெரிவித்துள்ளார்.